சாலையோர பழ வியாபாரிகள் அடிதடி :பதறியடித்து ஓடிய பொதுமக்கள்
சாலையோர பழ வியாபாரிகள் அடிதடி :பதறியடித்து ஓடிய பொதுமக்கள்
UPDATED : செப் 01, 2026 10:35 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கத்தில் சாலையோர பழ வியாபாரிகள் அடிதடியில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்ற மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் பிரதான சாலையின் இருபுறமும், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து காய்கறி கடைகள், உணவுக்கடை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடை நடத்துவதில், அடிக்கடி வியாபாரிகளுக்குள் அடிதடி ஏற்படுவதும் வழக்கம். அங்கு, வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 29, என்பவரும், வேளச்சேரி, காந்தி தெருவை சேர்ந்த ரமணன், 23, என்பவரும், பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இருவரும் தங்கள் கூட்டாளிகளை அழைத்து, நடுரோட்டில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ரமணன் கத்தியை எடுத்து கோவிந்தராஜனை வெட்டினார்.
இதனால், அவ்வழியாக சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த கோவிந்தராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
