/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்துாரில் தீப்பற்றி அரசு விரைவு பஸ் நாசம்
/
கூவத்துாரில் தீப்பற்றி அரசு விரைவு பஸ் நாசம்
ADDED : மார் 19, 2025 12:27 AM

கூவத்துார், புதுச்சேரியில் இருந்து 25 பயணியருடன் புறப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த அரசு விரைவு பேருந்து, சென்னை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. திருவான்மியூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், பேருந்தை ஓட்டினார்.
செய்யூர் அடுத்த, நல்லுார் கிராமம் அருகே, அதிகாலை 4:30 மணிக்கு வந்தபோது, சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி, பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில், பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள், மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து ஓட்டுனர், விபத்தில் சேதமான பேருந்தை, இழுவை வாகனம் உதவியுடன் திருவான்மியூர் பணிமனைக்கு மெதுவாக ஓட்டிச் சென்றார்.
கூவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, பேருந்தின் இன்ஜினில் இருந்து, திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது.
சுதாரித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி கீழே இறங்கினர். பின் பேருந்து, தீப்பற்றி எரியத் துவங்கியது.
தகவலறிந்து வந்த செய்யூர் மற்றும் கல்பாக்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். எனினும், பேருந்து எரிந்து நாசமானது.