ADDED : ஜன 25, 2024 12:43 AM

திருவொற்றியூர், மணலிபுதுநகர் அடுத்த கொண்டக்கரை பகுதியில், தனியார் ஓட்டலில் அரசால் தடை செய்யப்பட்ட, பான் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, கலால் பிரிவு உதவி கமிஷனர் அசோகன் தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 108 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுனில்ஷா, 35, என்பவரை கைது செய்து, மணலி புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஓட்டலின் உரிமையாளர் முருகன், 40, என்பவரை தேடி வருகின்றனர்.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சிறப்பு தனி படை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட 16 குழுக்கள் அமைத்து, போதை பொருளுக்கு எதிராக நேற்று சிறப்பு அதிரடி சோதனை நடந்தது.
இதில், குட்கா, கூலிப், ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 26 கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கி உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கடைகள் மூடப்பட்டன.
மேலும், குட்கா பொருட்கள் விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடந்த சோதனையில், 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.6.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.