/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலுக்குள் தத்தளித்த வாலிபரை மீட்ட ஊர்க்காவல்படை வீரர்
/
கடலுக்குள் தத்தளித்த வாலிபரை மீட்ட ஊர்க்காவல்படை வீரர்
கடலுக்குள் தத்தளித்த வாலிபரை மீட்ட ஊர்க்காவல்படை வீரர்
கடலுக்குள் தத்தளித்த வாலிபரை மீட்ட ஊர்க்காவல்படை வீரர்
ADDED : ஜன 22, 2026 06:05 AM

எண்ணுார்: மது போதையில் கடலுக்குள் தத்தளித்தபடி கிடந்த வாலிபரை, பொதுமக்கள் உதவியுடன் ஊர்காவல் படை வீரர் மீட்டார்.
எண்ணுார், பெரியகுப்பத்தில், நேற்று முன்தினம் மாலை, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கடலில் தத்தளித்தபடி பாறாங்கற்கள் இடுக்கில் கிடந்துள்ளார். இதை அவ்வழியே சென்ற, ஊர்க்காவல்படை வீரர் சைதாமு, 50, என்பவர் பார்த்துள்ளார்.
உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், அவ்வழியே சென்ற பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அரை மணி நேர போராட்டத்திற்கு பின், அந்த வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில், மீட்கப்பட்ட வாலிபர், எண்ணுார், அன்னை சிவகாமி நகர், 11வது தெருவைச் சேர்ந்த ஜெயகுமார், 32, என்பதும், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், அவரது மனைவி திருவல்லிகேணியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மனவிரக்தியில் இருந்த ஜெயகுமார், பெரியகுப்பம் கடல் பகுதியில், பாறாங்கற்கள் இடையே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
போதை அதிகமாகவே, பாறாங்கல் வழியாக ஏற முடியாமல், தவறி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது தெரியவந்துள்ளது. பின், போலீசார் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.
போதையில் கடலில் தத்தளித்த வாலிபரை, பொதுமக்கள் உதவியுடன் மீட்ட ஊர்க்காவல்படை வீரர் சைதாமுவை, மக்கள் வெகுவாக பாராட்டினர்.

