பிறந்த 2 நாளில் பெண் குழந்தை விற்கப்பட்ட கொடூரம்! ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்ட 'பாசக்கார' தாய் :3 டாக்டர்கள், புரோக்கர்கள் என 9 பேர் கைது
பிறந்த 2 நாளில் பெண் குழந்தை விற்கப்பட்ட கொடூரம்! ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்ட 'பாசக்கார' தாய் :3 டாக்டர்கள், புரோக்கர்கள் என 9 பேர் கைது
UPDATED : ஆக 28, 2026 03:21 AM
ADDED : ஆக 27, 2026 09:12 PM

வில்லிவாக்கம்: சென்னையில், பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை, பெற்ற தாயே, ஆந்திராவை சேர்ந்த தொழில் வர்த்தகரிடம், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி, டாக்டர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை, அரசின் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் குள்ள கணேஷ்; இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பவித்ரா, 25. இவருக்கு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனையில், கடந்த 18ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
கணவர் சிறையில் இருப்பதால் வறுமையில் இருந்த பவித்ராவால், மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதையறிந்த, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 26, உள்ளிட்ட குழந்தை விற்பனை புரோக்கர்கள், 'குழந்தையை விற்றால் மருத்துவமனை கட்டணத்தையும் செலுத்திவிடலாம்; கூடுதலாக பணமும் கிடைக்கும்' என, பவித்ராவிடம் ஆசைகாட்டி உள்ளனர்.
இதை நம்பிய பவித்ரா, பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை, ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்க சம்மதித்துள்ளார். புரோக்கர்கள் தனலட்சுமி, வேளச்சேரியைச் சேர்ந்த ஆண்டாள், 60 வாயிலாக, வில்லிவாக்கம் தனியார் மருத்துவமனை வரவேற்பாளாரான துர்காவை, 35, நாடியுள்ளனர்.
அவர் உதவியுடன், ஆந்திராவில் இத்தொழில் செய்யும் தஞ்சையை சேர்ந்த கணேசமூர்த்தி - செல்வரசி தம்பதிக்கு, குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.
இதற்கிடையே, குள்ள கணேஷின் நடவடிக்கைகள் காரணமாக, அவரது குடும்பத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, பவித்ராவுக்கு குழந்தை பிறந்ததும், தற்போது வீட்டில் குழந்தை இல்லாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், வில்லிவாக்கம் போலீசார் பவித்ராவை விசாரித்தபோது, புரோக்கர்கள் வாயிலாக குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆண்டாள், தனலட்சுமி, துர்கா உள்ளிட்டோர் அளித்த தகவலின் அடிப்படையில், ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை போலீசார் நேற்று, குழந்தையை மீட்டு, சென்னைக்கு கொண்டு வந்தனர்.
குழந்தை விற்கப்பட்ட விபரம், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு தெரிந்துள்ளது.
இதையடுத்து, குழந்தையை விற்ற தாய் பவித்ரா, 25, குழந்தையை வாங்கிய கணேசமூர்த்தி - செல்வரசி தம்பதி, பிரசவம் நடந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜசேகர், 62, நிர்வாக அலுவலர் விசாலாட்சி 53, மற்றொரு டாக்டர் லலிதாம்பிகை, மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா, புரோக்கர்கள் ஆண்டாள், தனலட்சுமி உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை நலனை கருத்தில் கொண்டு, தாயை தவிர்த்து எட்டு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை, அரசின் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
