சுதந்திர தின விழா ஒத்திகை: போக்குவரத்து மூன்று நாள் மாற்றம்
சுதந்திர தின விழா ஒத்திகை: போக்குவரத்து மூன்று நாள் மாற்றம்
ADDED : ஆக 06, 2026 02:19 PM
சென்னை: சென்னை, கோட்டையில் சுதந்திர தினவிழா, வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை, 11, 13 ஆகிய மூன்று நாட்கள், ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதற்காக இந்நாட்களில் காலை 6:00 மணி முதல் ஒத்திகை முடியும் வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
போலீசார் அறிக்கை:
உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை
காமராஜர் சாலை - ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை - முத்துசாமி பாலம் - முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம்
பாரிமுனையிலிருந்து, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - அண்ணா சாலை - வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.
அனுமதி அட்டை சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை, 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்
சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், போர் நினைவுச்சின்னம் - கொடிமரச்சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கி, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டும்
நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணி வரை ராஜாஜி சாலை - போர்நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்துசாமி சாலை - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின், பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்
நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், காமராஜர் சாலை - வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்து சாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின், வாகனத்தை பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்
அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி, வாகனங்களை தீவுத்திடல் உள்ளே நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்துள்ளனர்.
