/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேளம்பாக்கம், நெமிலியில் குவிந்த 10,000 பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்
/
கேளம்பாக்கம், நெமிலியில் குவிந்த 10,000 பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்
கேளம்பாக்கம், நெமிலியில் குவிந்த 10,000 பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்
கேளம்பாக்கம், நெமிலியில் குவிந்த 10,000 பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்
UPDATED : பிப் 21, 2024 05:48 AM
ADDED : பிப் 21, 2024 01:28 AM

தமிழகத்துக்கு வரும் அரிய வகை பறவைகள், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் பல்வேறு இடங்களில் முகாமிடுவது வழக்கம்.
இந்த வகையில், சென்னையின் சுற்றுப்புறத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழவேற்காடு ஏரி ஆகிய இடங்கள் தான், பறவைகள் வலசை செல்லும் பகுதிகளாக கருதப்படுகின்றன.
இதற்கு அப்பால், கேளம்பாக்கம் அருகில் கைவிடப்பட்ட பழைய உப்பளங்கள் புதிய நீர் நிலைகளாக மாறி உள்ளதால், சில ஆண்டுகளாக வலசை பறவைகள் முகாமிடுவது அதிகரித்து உள்ளது.
முட்டுக்காடு முகத்துவார பகுதியை ஒட்டி இந்த இடம் அமைந்து உள்ளதால், ஏற்படும் உவர் நீர் கலப்பு கடலோர பறவைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி உள்ளது.
புது இடங்கள்
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழக்கமான இடங்களில், காட்டு வாத்துகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளதாக கருதப்படுகிறது. இந்த பின்னணியில், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாத பழைய உப்பளங்களில், காட்டு வாத்துகள் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிர்வாகி திருநாரணன் கூறியதாவது:
சமீப காலமாக, வழக்கமான இடங்களை கடந்து, புதிய இடங்களில் வலசை பறவைகள் அதிகமாக முகாமிடுகின்றன.
இது போன்ற கழிமுக பகுதிகளில், தேவையான உணவு கிடைப்பது, குறைந்த ஆழத்துக்கு மட்டும் தண்ணீர் தேங்கி இருப்பது, மனிதர்களின் தொந்தரவு இல்லாததே பறவைகள் முகாமிட முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
ஏற்ற சூழல்
கேளம்பாக்கம், நெமிலிச்சேரி, முட்டுக்காடு, ஓதியூர் ஏரி ஆகிய இடங்களில் நிலவும் சூழல் வலசை பறவைகளுக்கு ஏற்றதாக அமைந்து உள்ளது.
கேளம்பாக்கம் - நெமிலிச்சேரியில், நாமதலை வாத்துகள், தட்டைவாயன், ஊசிவால் வாத்துகள், நீல சிறகி, கிளுவை ஆகிய காட்டு வாத்து இனங்கள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, இங்கு, 10,000த்துக்கும் மேல் பறவைகள் முகாமிட்டுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இத்துடன், 2,000 பூ நாரைகள், 300க்கும் மேற்பட்ட அரியவகை மெல்லிய அலகு கடற்காக்கை இங்கு முகாமிட்டுள்ளன. இந்த பகுதியில் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்ய, வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

