/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் சட்டவிரோத மண் கொள்ளை கண்டுகொள்ளாத இன்ஸ். துாக்கியடிப்பு?
/
ஆவடியில் சட்டவிரோத மண் கொள்ளை கண்டுகொள்ளாத இன்ஸ். துாக்கியடிப்பு?
ஆவடியில் சட்டவிரோத மண் கொள்ளை கண்டுகொள்ளாத இன்ஸ். துாக்கியடிப்பு?
ஆவடியில் சட்டவிரோத மண் கொள்ளை கண்டுகொள்ளாத இன்ஸ். துாக்கியடிப்பு?
ADDED : ஜன 25, 2024 12:46 AM

ஆவடி,
ஆவடி அடுத்த மோரை ஊராட்சி பங்காருபேட்டை பகுதியில், கடந்த ஓராண்டாக அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து, சட்டவிரோதமாக மண் கொள்ளை நடக்கிறது.
இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக பங்காருபேட்டை நலச்சங்க நிர்வாகி ஹரிகிருஷ்ணா என்பவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:ஆவடி அடுத்த மோரை, பங்காருபேட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மணல் மாபியா நபர்களான ராஜேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர், பல மாதங்களாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பெயர் வெளியிடாமல், சமூக ஆர்வலர்கள் போலீசில் அளித்த புகார், மேற்கண்ட நபர்களுக்கு தெரிந்தது.
இந்த புகார், பங்காருபேட்டை மக்கள் பொது நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது எனக்கருதி, நலச்சங்க துணைத் தலைவரான தி.மு.க., பிரமுகர் ஹரிகிருஷ்ணனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்தார்.
ஜன., 20ம் தேதி மாலை, பங்காருபேட்டை அரசு பள்ளி அருகே ஹரிகிருஷ்ணாவை மடக்கி, ராஜேஷ் இரும்புக் கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன், ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், கொலை முயற்சி குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளித்தார்.
ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் சமரசத்தில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேஷை தாக்கியதாக, ஹரிகிருஷ்ணன் மீது வழக்கு பதியப் போவதாக, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, கடந்த 21ம் தேதி மிரட்டி உள்ளனர்.
எனவே, இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோபிநாத், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, ஆவடி கமிஷனர் சங்கர் நேற்று பிறப்பித்தார்.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இந்த வழக்கு தொடர்பாக, இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்படவில்லை; தேர்தல் வருவதையொட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்' என, தெரிவித்தனர்.