/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குருபரிகார லட்சார்ச்சனை கட்டண வசூலில் முறைகேடா?
/
குருபரிகார லட்சார்ச்சனை கட்டண வசூலில் முறைகேடா?
ADDED : மே 13, 2025 12:30 AM
பாடி :குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னை பாடியில் உள்ள, 'குருஸ்தலம்' என அழைக்கப்படும் பழமையான திருவல்லீஸ்வரர் கோவிலில் சிறப்பு லட்சார்ச்சணை மற்றும் குரு பரிகார பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, குரு பகவானை தரிசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு, லட்சார்ச்சனைக்காக பக்தர்கள் சிலர், கட்டணம் செலுத்தும் இடத்திற்கு சென்று, பணம் செலுத்தினர்.
ஆன்லைனில் வாயிலாக செலுத்திய பணம், கோவில் கணக்கிற்கு செல்லாமல், அனிதா என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றதாக, பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறியதாவது:
ஆன்லைன் வழியே பணம் செலுத்தும், 'ஜி பே' செயலி வாயிலாக, லட்சார்ச்சனைக்காக, 500 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றது.
ஊழியர்கள் வழங்கிய ரசீதில் உள், 'கியூ ஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்தால் கோவில் குறித்த எந்த தகவலும் வரவில்லை. விளக்கம் கேட்டபோது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் செயல் அலுவலர் குமரன் கூறியதாவது:
வயதான சிலர் கையில் பணம் கொண்டு வராததால், 'ஜிபே' வாயிலாக லட்சார்ச்சனை கட்டணம் செலுத்தி உள்ளனர். அந்த பணம் கோவில் ஊழியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதேபோல், 29 பேர் வரை ஆன்லைனில் பணம் செலுத்தியுள்ளனர். அதற்கான தொகையான, 14,500 ரூபாய், அன்று இரவே கோவில் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு விட்டது. இதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''கட்டண வசூலில் தவறு ஏதும் நடக்கவில்லை. எனினும், இதுகுறித்து விசாரிக்கிறேன்,'' என்றார்.
***