/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி, கல்லுாரிகளில் சங்கீதம் கற்பிப்பது அவசியம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வலியுறுத்தல்
/
பள்ளி, கல்லுாரிகளில் சங்கீதம் கற்பிப்பது அவசியம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வலியுறுத்தல்
பள்ளி, கல்லுாரிகளில் சங்கீதம் கற்பிப்பது அவசியம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வலியுறுத்தல்
பள்ளி, கல்லுாரிகளில் சங்கீதம் கற்பிப்பது அவசியம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வலியுறுத்தல்
UPDATED : பிப் 07, 2026 07:17 AM
ADDED : பிப் 07, 2026 06:05 AM

சென்னை: ''பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு, சங்கீதம் கற்றுத் தர வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த, சங்கீதத்துக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
'லய மதுரா' இசைப் பள்ளியின் 25ம் ஆண்டு விழா, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் இசைப் பயணத்தின், 60 ஆண்டுகள் நிறைவு விழா மற்றும் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நேற்று நடந்தது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:
பக்தி, கலாசாரம், ஊர்வலம், சங்கீதம் உள்ளிட்ட அனைத்து கலாசாரத்திற்கும், பிரசித்தி பெற்ற ஊர் திருவாரூர். அந்த ஊரைச் சேர்ந்த பக்தவத்சலத்துக்கு, தற்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக அரசின் விருதுகளும், அவருக்கு கிடைத்துள்ளன.
மிருதங்கம் ஒரு முக்கியமான இசைக் கருவி. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மிருதங்கம் வாசிப்பது போன்ற சிற்பங்கள் உள்ளன. மக்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்க்க வேண்டியது அவசியம்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு சங்கீதம் கற்றுத் தர வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த, சங்கீதத்துக்கு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
கலைகளையும், கலைஞர்களையும் கவுரவிக்க, இதுபோன்ற சங்கீத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள், போதிய கவனம் செலுத்தி, சங்கீத நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.
சமூகத்தில் ஓரளவு தர்மம், சகிப்புத் தன்மை, நல்லவை இருப்பதற்கு காரணம் பக்தி. அதற்கு அடிப்படை இதுபோன்ற கலைகள். மனம், உடல் சீராக இயங்க, சங்கீதம் அவசியம். கணக்கு வாயிலாகத்தான் கணினி உருவானது. அந்த கணக்கு, இந்த மிருதங்க கலையில் உள்ளது.
பாரதம் சார்ந்த கலைகளை வளர்க்க, மத்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், வேதம், புராணம், 63 ஆயக்கலைகள் போன்றவற்றை மேலும் வளர்க்க வேண்டும். புத்தி கூர்மை, விசாலமான மனது இருக்க வேண்டும். அது கருணையோடு இருத்தல் வேண்டும். இதுவே பாரதத்தின் நாதமாக உள்ளது.
சாஸ்திரங்கள் பல உள்ளன. அவற்றை சரஸ்வதி மஹாலில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அறிவியலோடு சேர்த்து, சாஸ்திரங்களையும் பயில வேண்டும். சங்கீதம், விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்க துாண்டுகிறது. விஞ்ஞானம், கலாசாரம், வியாபாரம் என அனைத்தும் வளர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

