/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்தக்கோட்டத்தில் இன்று கந்தசஷ்டி விழா துவக்கம்
/
கந்தக்கோட்டத்தில் இன்று கந்தசஷ்டி விழா துவக்கம்
ADDED : அக் 22, 2025 12:09 AM
சென்னை: கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவிலில், மகா கந்த சஷ்டி பெருவிழா இன்று துவங்குகிறது. இதையொட்டி நடக்கும் கோடி அர்ச்சனையில், பக்தர்கள் பங்கேற்கலாம்.
வடலுார் ராமலிங்க அடிகளாரால் சிறப்பிக்கப்பட்டது சென்னை பூங்காநகரில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில். இக்கோவிலில் மூலவராக கந்தசுவாமியும், உற்சவராக முத்துக்குமார சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் மகா கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான கந்தசஷ்டி பெருவிழா இன்று துவங்கி வரும், 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த ஆறு நாட்களிலும் மூலவர், ஞானதண்டாயுதபாணி, ஆறுமுகம், உற்சவர் சன்னிதிகளில்,1008 சகஸ்ரநாம மந்திரங்களுடன் கூடிய அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம், சந்தர்பனை ஆகிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை நடக்கிறது.
கோடி அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்கலாம். அர்ச்சனையில் பங்கேற்க, 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கந்த சஷ்டி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி டாலர் பெற, 625 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் முல்லை, உதவி கமிஷனர் சிவகுமார், அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார், அறங்காவலர்கள் செந்தில்வேலன், கந்தசுவாமி, நந்தகுமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

