/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரி செலுத்தாத 5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் நிலுவை வைத்தோர் பட்டியலும் வெளியீடு
/
வரி செலுத்தாத 5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் நிலுவை வைத்தோர் பட்டியலும் வெளியீடு
வரி செலுத்தாத 5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் நிலுவை வைத்தோர் பட்டியலும் வெளியீடு
வரி செலுத்தாத 5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் நிலுவை வைத்தோர் பட்டியலும் வெளியீடு
ADDED : பிப் 01, 2026 05:13 AM

சென்னை: நடப்பு ஆண்டுக்கான சொத்துவரியை செலுத்தாத, 5 லட்சம் பேருக்கு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள 100 பேர் பட்டியலையும், மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான வருவாயில், சொத்துவரி, தொழில்வரி பிரதானமாக உள்ளது. அதன்படி, 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய்க்கு மேல், மாநகராட்சி வரி வசூலித்து வருகிறது.
இதில், அரையாண்டு துவங்கிய முதல் 30 நாட்களில் சொத்துவரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முறையாக செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீத தனி வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
அதன்படி, மாநகராட்சிக்கு நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாமல், கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருக்கும், 100 பேர் அடங்கிய பட்டியலை, https://www.chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் இதுவரை, 1,684 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகி உள்ளது. கடந்த நிதியாண்டில், 2,023 கோடி ரூபாய் வசூலானது.
இந்த நிதியாண்டில், அதைவிட கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீண்டகாலமாக, 33.68 கோடி ரூபாய் சொத்துவரி நிலுவை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோரின் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்தாண்டு சொத்துவரியை செலுத்தாமல் இருக்கும், 5 லட்சம் பேருக்கு நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சொத்துவரியை எளிதாக செலுத்தும் வகையில், 'க்யூ ஆர் கோடு' அச்சிடப்பட்டு உள்ளது. அதை, 'ஜி பே, போன் பே' போன்றவற்றில் ஸ்கேன் செய்து, எளிதாக சொத்துவரியை செலுத்தலாம்.
இதுபோன்ற தொடர் நடவடிக்கையால், இந்தாண்டுக்கு, 2,100 கோடி ரூபாய் வரை சொத்துவரி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

