/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மதராஸ்' கால பாரம்பரிய பஸ் சேவை துவக்கம்... ஜாலியா ஒரு ரவுண்டு! ரூ.50 டிக்கெட்டில் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம்
/
'மதராஸ்' கால பாரம்பரிய பஸ் சேவை துவக்கம்... ஜாலியா ஒரு ரவுண்டு! ரூ.50 டிக்கெட்டில் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம்
'மதராஸ்' கால பாரம்பரிய பஸ் சேவை துவக்கம்... ஜாலியா ஒரு ரவுண்டு! ரூ.50 டிக்கெட்டில் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம்
'மதராஸ்' கால பாரம்பரிய பஸ் சேவை துவக்கம்... ஜாலியா ஒரு ரவுண்டு! ரூ.50 டிக்கெட்டில் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம்
ADDED : ஜன 15, 2026 06:10 AM

சென்னை: சென்னையில் முக்கிய சுற்றுலா இடங்களை கண்டு களிக்க வசதியாக,'சென்னை உலா' என்ற பெயரில், பழங்கால பாரம்பரியத்துடன் கூடிய ஐந்து பேருந்துகளின் சேவையை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று துவக்கியது. சென்னையை சுற்றிப்பார்க்க விரும்புவோர், பேருந்தில் ஏறி, 50 ரூபாய் கட்டணத்தில், ஜாலியாக ஒரு ரவுண்டு அடிக்கலாம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை, 'மதராஸ், மதராசபட்டணம்' என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ், சென்னை ஒரு முக்கிய வர்த்தக மற்றும் நிர்வாக மையமாக வளர்ந்தது.
சென்னையில், பழமையான மற்றும் பாரம்பரிய கட்டடங்கள், நினைவு சின்னங்கள் இன்றும் நம் கண்முன் நிற்கின்றன. அந்த வகையில், அந்த காலத்தில் சென்னையில் ஓடிய பாரம்பரிய பேருந்துகளை மீண்டும் சென்னையில் கொண்டு வர, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
சென்னை உலா பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய ஐந்து பேருந்துகளின் வடிவமைப்பு பணிகள், குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் நடந்து வந்தன.
இதற்கிடையே, இந்த ஐந்து பேருந்துகளின் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்தில் ஏறி, சிறிது துாரம் பயணம் செய்தார்.
நிகழ்வில், போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
'சென்னை உலா' என்ற பெயரில், சிவப்பு நிறத்தில், பழங்கால பாரம்பரியத்துடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 1980களில் ஓடிய மாநகர பேருந்துகளில் இருப்பது போல், இருக்கைகள், கண்ணாடி, ஜன்னல், பேருந்து முகப்பு இருப்பது பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது.
சென்ட்ரலில் புறப்படும் இந்த பேருந்துகள், ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, மயிலாப்பூர் லஸ் கார்னர், கபாலீஸ்வரர் கோவில், சாந்தோம் சர்ச், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், மன்றோ சிலை, பல்லவன் இல்லம் வழியாக மீண்டும் சென்ட்ரல் வந்தடையும்.
மொத்தம், 30 கி.மீ., துாரம் வட்டப்பாதையில் செல்லும் இந்த பேருந்துகள், 30 நிமிட இடை வெளியில் இயக்கப்பட உள்ளன.
புதிய அனுபவம்
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள வரலாற்று இடங்களை, பாரம்பரிய சின்னங்களை காணும் வகையில், 1980ல் இயக்கப்பட்ட பாரம்பரிய பேருந்துகளின் சேவையை துவக்கி உள்ளோம்.
ஒரு நாள் முழுதும் பயணம் செய்ய, 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்க வேண்டும். இந்த பேருந்து சேவை, பயணியருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வசதியாக ஏற்பாடு செய்துள்ளோம். நினைவுச் சின்னங்களின் பெருமைகளை விளக்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
இதற்கான டிக்கெட்டை ந டத்துநரிடமும், 'சென்னை ஒன்' செயலி வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பண்டிகை காலத்தில், இந்த சேவை, வரும் 16 முதல் 18ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
மற்ற வார நாட்களில், மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில், காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும்.
பயணியரின் வரவேற்பை பொறுத்து, இந்த வகை பேருந்துகளின் எண்ணிக்கை பின்னர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

