/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கற்பக விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
/
கற்பக விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2025 12:21 AM

சென்னை, அயப்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது.
அயப்பாக்கம், கற்பக விநாயகர் அவென்யூவில் புதிதாக கற்பக விநாயகர் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் புணராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
இதனை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, கணபதி ஹோமம் உட்பட நவக்கிரஹ, மகாலட்சுமி, துர்கா, சரஸ்வதி ஹோமங்கள் நடத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசபலி பூஜை நடந்தது. நேற்று மாலை அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை நடந்தன.
கும்பாபிஷேக நாளான இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடப்புறப்பாடு நடக்கிறது.
காலை 10:15 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மூலவர் சன்னதிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை ஸ்ரீதர் சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார். நண்பகல் சமபந்தி போஜனத்தை மக்கள் சேவகர் துரைவீரமணி துவக்கி வைக்கிறார்.
மாலை 6:00 மணிக்கு திருமுறை ஞானதிருச்சபையை சேர்ந்த பிரபு, ஜெயலட்சுமி தலைமையில் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தீர்த்தீஸ்வரர் கோவில்
* குன்றத்துார் அடுத்த பரணிபுத்துாரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலிலும் இன்று காலை 8:00 முதல் 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை ஆரம்பம் விக்னேஷ்வர பூஜை உள்ளிட்டவை நடக்க உள்ளன.