ADDED : ஏப் 15, 2025 12:34 AM
மறைமலைநகர்,தாம்பரம் அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே வனப்பகுதியில், துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், இறந்து கிடந்த நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மிரஜ், 31, என தெரிந்தது. கடந்த நான்கு மாதங்களாக மறைமலைநகர் அடுத்த செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 12ம் தேதி, மொபைல்போனில் தன் மனைவியிடம் பேசிய போது, சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மிரஜ் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.