/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.1.19 கோடி ஏமாற்றியவர் கைது
/
கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.1.19 கோடி ஏமாற்றியவர் கைது
கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.1.19 கோடி ஏமாற்றியவர் கைது
கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.1.19 கோடி ஏமாற்றியவர் கைது
ADDED : செப் 22, 2024 06:54 AM

ஆவடி : செங்குன்றம், மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. இவர், செங்குன்றத்தில் 'எஸ்.கே.எஸ்., என்டர்பிரைசஸ்' என்ற பெயரில், தொழிற்சாலைகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2018ல், கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சியாஸ் நெல்லிக்கோடு என்பவருடன், தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 முதல் 2021 வரை சியாஸ் நெல்லிக்கோடு, துபாயில் இருந்து சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர் வாயிலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, கார்த்திகேயனுடன் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2021ல், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி கார்த்திகேயனிடம், முன்பணமாக, 1.19 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, கார்த்திகேயனுக்கு தெரியாமல் மற்றொரு நபருக்கு விற்று, பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார்.
கார்த்திகேயன் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, பல்வேறு காரணங்கள் கூறி, சென்னை சேத்துப்பட்டில் இயங்கிய அலுவலகத்தை மூடிவிட்டு, கேரளாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
கார்த்திகேயன் பலமுறை அங்கு சென்று கேட்ட போது, சியாஸ் நெல்லிக்கோடு மனைவி, பணத்தை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து கார்த்திகேயன், கடந்த 2023 டிசம்பரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின்படி, போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும், சியாஸ் நெல்லிக்கோடு விசாரணைக்கு வரவில்லை.
இதையடுத்து, கேரளா சென்ற தனிப்படை போலீசார், சியாஸ் நெல்லிக்கோடு, 53, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.