ADDED : ஜன 19, 2025 12:25 AM

அண்ணா நகர், சங்கத்தில் ஏற்பட்ட பிரச்னையால், பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆபாசமாக சித்தரித்து, அவதுாறு பரப்பியதாக, தனியார் மாத இதழின் பத்திரிகையாளரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரை சேர்ந்த, 45 வயது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் அளித்த புகார்:
பெரம்பூர், அகரம் பகுதியில் இயங்கும், பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் சில ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருக்கிறேன். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செயலாளரான சத்தியராஜ், 40 என்பவர், என்னை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பெரம்பூரை சேர்ந்த சத்தியராஜ் என்பவர், சங்கத்தில் ஏற்பட்ட பிரச்னையால், 2021ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பின், சங்கத்தில் அலோசகராக இருந்த பெண் பத்திரிகையாளர், தலைவர் பதவிக்கு வந்துள்ளார்.
இதனால் அதிருப்தியில் இருந்த சத்தியராஜ், மற்ற நிர்வாகிகளை மிரட்டியதாகவும், பெண் பத்திரிக்யைாளர் குறித்து அவதுாறு பரப்பியதாகவும், விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சத்தியராஜை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.