தார் காய்ச்சும் பாய்லர் இயந்திரம் திருடியவர் கைது
தார் காய்ச்சும் பாய்லர் இயந்திரம் திருடியவர் கைது
ADDED : ஏப் 06, 2026 10:29 PM
கோடம்பாக்கம்: கோடம்பாக்கத்தில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தார் காய்ச்சும் பாய்லர் இயந்திரத்தை திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஜெகதீசன், 36, என்பவர் பணி தள பொறியாளராக உள்ளார். இவரது நிறுவனம் வாயிலாக, கோடம்பாக்கம் புலியூர் பிரதான சாலையில் நடந்துவரும் சீரமைப்பு பணி கவனித்து வந்தார்.
அங்கு பயன்படுத்தி வந்த 3.5 டன் உடைய 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தார் காய்ச்சும் பாய்லர் இயந்திரம், பிப்., 12ம் தேதி பழுதானதால், அதே சாலையில் ஓரமாக நிறுத்தியிருந்தனர். கடந்த மாதம் 3ல், அந்த இயந்திரம் திருடு போனது.
இதுகுறித்த புகாரை விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், இயந்திரத்தை திருடிய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜவேலு, 49, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், இயந்திரத்தில் கயிறு கட்டி வேறு வாகனம் வாயிலாக ராஜவேலு இழுத்து சென்று, கே.கே., நகர் சிவலிங்கபுரம் பிரதான சாலையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதையும், போலீசார் மீட்டனர்.
