/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 ஆண்டுகள் போலீசாருக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
/
5 ஆண்டுகள் போலீசாருக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
ADDED : நவ 10, 2024 12:31 AM

கோயம்பேடு,
அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பு, 20. இவர், கடந்த 2019ல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில், மேலாளராக பணி புரிந்தார்.
அதே ஆண்டு, பிப்., 18ம் தேதி, விடுதியில் தங்கியிருந்த ஜீவா என்பவர், தன் சட்டை பையில் இருந்த 4,000 ரூபாயை யாரோ எடுத்து விட்டதாக அன்பிடம் தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதே விடுதியில் தங்கியிருந்த காரைக்குடியை சேர்ந்த அழகுராஜா என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
இந்த தகவலை, அன்பு ஜீவாவிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அழகுராஜா, 19ம் தேதி இரவு, அன்புவிடம் தகராறு செய்து, அவரது தலையில் கத்தியால் வெட்டி தப்பினார்.
புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். ஆனால், அழகுராஜா தலைமறைவானார். அவர் குறித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், அழகுராஜா, 34, சேப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.