/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மஞ்சக்கொல்லை தெரு சாலை பணி 4 மாதமாக கிடப்பில் உள்ளதால் அவதி
/
மஞ்சக்கொல்லை தெரு சாலை பணி 4 மாதமாக கிடப்பில் உள்ளதால் அவதி
மஞ்சக்கொல்லை தெரு சாலை பணி 4 மாதமாக கிடப்பில் உள்ளதால் அவதி
மஞ்சக்கொல்லை தெரு சாலை பணி 4 மாதமாக கிடப்பில் உள்ளதால் அவதி
ADDED : ஜன 25, 2024 12:45 AM

அமைந்தகரை, மஞ்சக்கொல்லை தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிகள், நான்கு மாதங்களாக கிடப்பில் உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு அமைந்தகரையில், மஞ்சக்கொல்லை தெரு உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் தரை அமைக்கப்பட்டது. அதன் பின்,
பல்வேறு காரணங்களுக்கான பள்ளம் தொண்டப்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என, கடந்த ஏழு ஆண்டுகளாக முதல்வர் தனிப்பிரிவு, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளிடம், மக்கள் தொடர்ந்து முறையிட்டனர்.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு சாலை அமைப்பதற்காக, 16.72 லட்சம் ரூபாய் மதீப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சாலை பணிக்கு முன், இங்கு கடந்த அக்., மாதம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கின. பல இழுபறிக்குப் பின், கடந்த நான்கு மாதங்களாக பணிகள் நடந்து முடிந்தன.
தற்போது, புதிய சாலை பணியை துவங்காமல், சாலை முழுதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சாஜித் பாஷா என்பவர் கூறியதாவது:
ஏழு ஆண்டு கால போராட்டத்திற்குப் பின், மஞ்சக்கொல்லை தெரு குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்த பின், புதிய சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்தனர்.
இதை சுற்றியுள்ள கதிரவன் காலனி, அய்யாவு தெரு உள்ளிட்ட இடங்களில், பல மாதங்களுக்கு முன்பே புதிய சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரியின் அலட்சிய போக்கால், பணிகள் முடங்கின.
கடந்த மழையின் போது, சாலை முழுதும் சேறும் சகதியுமாக மாறி, கடும் வேதனைகளை சந்தித்தோம். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
ஒதுக்கிய நிதியில் கையாடல் நடந்திருப்பதாக தெரிகிறது. முதல்வர் தனிப்பிரிவு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, விரைவில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.