/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2032ல் 7,578 பேருந்துகள் தேவை எம்.டி.சி., கணிப்பு
/
2032ல் 7,578 பேருந்துகள் தேவை எம்.டி.சி., கணிப்பு
ADDED : ஜூன் 29, 2025 12:21 AM
சென்னை, பொது போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால், சென்னை மற்றும் புறநகரில் வரும் 2032ல் 7,578 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், அதற்கேற்ப பணிமனைகள் 42 ஆகவும் அதிகரிக்கவும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 1972ம் ஆண்டில் 1,029 ஆக இருந்த மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை, தற்போது 3,376 ஆக உள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என, மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர். கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையமும் விரைவில் திறக்கப்பட உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு சென்று வருவோரின் வசதிக்காக, பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் வரும் 2032ல் மாநகர பேருந்துகளின் தேவை 7,578 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல், பணிமனை எண்ணிக்கை 42 ஆகவும் உயர்த்த வேண்டியுள்ளது.
எனவே, வரும் ஆண்டுகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தவிர, கூடுதல் பேருந்துகளை வாங்கி இயக்க உள்ளோம்.
அதேபோல், மாநகர பேருந்துகளை பராமரித்து இயக்க, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பகுதிகளில் புதிதாக 10 பணிமனைகள் அமைக்க உள்ளோம்.
இதற்கு, 180 முதல் 200 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் பேச்சு நடத்தி, நிலங்களை அடையாளம் கண்டு கையகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.