ADDED : அக் 19, 2024 12:45 AM

ராயபுரம்,
ராயபுரம் சுடுகாட்டில், குளம் போல் மழைநீர் தேங்கி இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் உறவினர்கள் திணறினர்.
ராயபுரம் மூலக்கொத்தளத்தில், 24 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இது, 300 ஆண்டுகள் பழமையானது. மூன்று நாட்களாக பெய்த மழையால் மூலக்கொத்தளம் சுடுகாடு, மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமலும், இறுதி சடங்கு செய்ய முடியாமலும் உறவினர்கள் திணறுகின்றனர்.
சுடுகாட்டின் ஒருபகுதி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதி இளைஞர்கள் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை இந்த மைதானத்தில் ஆடி வருகின்றனர். மழை நீர் தேக்கத்தால், அவர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காலங்களில் மோட்டார் வைத்து, தண்ணீர் வெளியேற்றுவது தொடர் கதையாக உள்ளது. முறையாக மழைநீர் வடிகால் அமைத்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

