ADDED : மார் 10, 2026 05:11 AM
சென்னை: இடம்பெயர்தல் குறித்த தேசிய கருத்தரங்கம் எழும்பூரில் நேற்று நடந்தது.
சென்னை சமூகப் பணி பள்ளியின் சமூக பணித்துறை சார்பில், 'இடம்பெயர்வின் எதார்த்தங்களை வெளிப்படுத்துதல்' என்ற தலைப்பில், எழும்பூரில் நேற்று தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கை, சிறப்பு விருந்தினரான முன்னாள் ஐ.ஏ.ஸ்., அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி துவக்கி வைத்தார்; 'புலம்பெயர்தலின் சவால்கள்' எனும் ஆவணப்படத்தை வெளியிட்டு அவர் பேசுகையில், ''சொந்த நாடு, மாநிலம், மாவட்டம் உள்ளிட்டவற்றை விட்டு, மற்றொரு இடத்திற்கு வேலை தேடி செல்வோரும், இடம்பெயர் தொழிலாளர்கள் தான். சொந்த நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்வோர், அங்கு குடியுரிமை பெற பல ஆண்டுகள் வரை காத்து கொண்டு இருக்கின்றனர்,'' என்றார்.
கருத்தரங்கில் உதவிப் பேராசிரியர் ஆண்டனி ஸ்டீபன் பேசுகையில், ''சென்னையில் சாலையோரம் வசிக்கும் வீடு இல்லாதவர்களிடம் மெட்ராஸ் சமூகப் பணிப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். அதன்படி ராயபுரம் மண்டலத்தில், 2,322 குழந்தைகள் என மொத்தம் 13,529 பேர் வீடுகள் இல்லாமல் வசிப்பது தெரியவந்துள்ளது. அதில் 5.12 சதவீதம் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் விட்டுள்ளனர்,'' என்றார்.
