/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு மண்டலத்தில் சுகாதார அதிகாரிகள் நியமனம்
/
அடையாறு மண்டலத்தில் சுகாதார அதிகாரிகள் நியமனம்
ADDED : மே 20, 2025 01:29 AM
அடையாறு, மே 20--
தெற்கு வட்டாரத்தில், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஐந்து மண்டலங்கள் உள்ளன.
அடையாறு மண்டல சுகாதார அதிகாரி ஷீலா, தெற்கு வட்டார கூடுதல் மாநகர நல அதிகாரியாக கூடுதலாக பொறுப்பு வகித்தார். இவர், கடந்த 11ம் தேதி முதல் நீண்ட நாள் விடுப்பில் சென்றுள்ளார்.
பொதுவாக, ஒரு அதிகாரி நீண்ட நாள் விடுப்பில் சென்றால், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
ஆனால், அடையாறு மண்டலம் மற்றும் தெற்கு வட்டார அலுவலகத்தில், சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
இதனால், ஐந்து மண்டலங்களில் சுகாதார நடவடிக்கைகள், மருத்துவமனை கண்காணிப்பு, கொசு ஒழிப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் சரிபார்ப்பு, பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பெருங்குடி மண்டல சுகாதார அதிகாரி கண்ணன், அடையாறு மண்டல பொறுப்பு சுகாதார அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஏற்கனவே சோழிங்கநல்லுார் மண்டல பொறுப்பு சுகாதார அதிகாரியாகவும் பணி புரிகிறார்.
மேலும், மத்திய வட்டார கூடுதல் மாநகர நல அதிகாரி, தெற்கு வட்டார கூடுதல் மாநகர நல அதிகாரியாக பொறுப்பு வகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.