/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசையில் விருந்து படைத்த நிஷா ராஜகோபால்
/
மார்கழி இசையில் விருந்து படைத்த நிஷா ராஜகோபால்
UPDATED : டிச 28, 2025 05:20 AM
ADDED : டிச 28, 2025 05:17 AM

அருண் நரசிம்மன்
நி ஷா ராஜகோபால், முதல் நாள் மாலை 4:00 மணிக்கு பார்த்தசாரதி ஸ்வாமி சபா கச்சேரியிலும், மறுநாள் காலை 6:00 மணிக்கு வியெஸ்யெஸ் பவுண்டேஷனுடைய மயிலாப்பூர் கச்சேரியிலும் உருப்படிகளோ, ராகங்களோ ஒன்றுகூட, மறு ஒலிபரப்பாகாமல், பிரமாதமாகப் பாடினார்.
மாலைக் கச்சேரியில் தீக் ஷிதர், கோபாலகிருஷ்ண பாரதி, மைசூர் வாசுதேவாச்சார், பொன்னையா பிள்ளை (நீலாம்பரி ராகத்தில் தெலுங்கு கிருதி), பாபநாசம் சிவன், தியாகையர் என்று பல்வகை இசைக் கர்த்தாக்களின், பல்வேறு ராகக் கிருதிகளைக் கையாண்டு, 'அபங்' வகையில், 'பிம்ப்ளாஸ்' ராகத்தில், பானுதாஸரின் மராத்தி பாடலுக்குப் பின், துளசிதாசரின் ஹனுமான் சாலிஸாவில் முடித்துக்கொண்டார்.
ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட சிம்மேந்திர மத்தியமம் (நின்னே நம்மித்தி கிருதி) கேதாரகவுளை (துளசி வில்வ கிருதி) ராகங்களில், லகுவான ஸ்வர ஏற்ற இறக்கங்களுடனும், சஞ்சாரங்களில் குரல் பிசிறல்களோ கற்பனைக் குறைவோ இன்றி, அருமையான இசையை வழங்கினார்.
கேதாரகவுளையில் குறிப்பாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தனிப்பட்ட தரஸ்தாயி தொடக்கத்தை (கிருதி சரணத்தில் பரமாநந்தமுதோ எனும் இடத்தில் இசைத்தொலிக்கும் சஞ்சாரங்கள்) சுவீகரித்து விரித்தது ரசிக்கத்தக்க அனுபவம்.
மறுநாள் காலை ஆபேரி ஷண்முகப்பிரியா ராகங்களில் செய்த ஆலாபனைகளில் நல்ல தேர்ச்சி. நிரவல் ஸ்வரங்களில் சீரான, வளமான கற்பனை. நிஷாவிடம் ஓங்கி ஒலிக்கையிலும் குரலில் மதுரமான செவ்வியல் சவுக்கியமான இசையே வெளிப்படுவது நிறைவு.
சு மித்ரா வாசுதேவ், ராக சுதா அரங்கில் வழங்கிய மாலைக் கச்சேரி, செவ்வியல் இசையடர்வு மிக்க இதமான அனுபவம். பைரவி ராக 'விரிபோணி' வர்ணத்தில் தொடங்கினார். வழக்கமான இரண்டைக் கடந்த மூன்றாவது சிட்டை ஸ்வரக் கட்டாகட்டும், அரிதாகவே மேடையில் வழங்கப்படும் சரணங்கள் ஆகட்டும், தன் பாண்டித்தியமான பாடாந்தரத்தைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தினார்.
பாபநாசம் சிவனின் 'கந்தா வந்தருள்' கிருதியிலும் அதற்கான ஆலாபனையிலும், ஆபேரி ராகத்தை 'சுத்த தைவதம்' கொண்ட தொன்மையான வடிவில் வழங்கியதிலும், இப்பாண்டித்தியம் வெளிப்பட்டது.
கீர்வாணி ராகத்தில் (கீரவாணி இல்லை, இது கவாம்போதி எனும் மேளகர்த்தா ராகம்) தீக் ஷிதரின் கிருதிக்குப் பின், சங்கராபரணம் ராகம் விரிவான ஆலாபனை. சங்கராச்சார்யம் எனத் தொடங்கும் கிருதியை ஆதி தாளம் இரண்டு களை சவுக்கத்தில் விரித்து, நிரவல் ஸ்வரகல்பனைகள் செய்து முடித்தார்.
அருண் பிரகாஷ் தனி ஆவர்த்தனத்தை, கணக்குகளுடனேயே கண்ட நடையில் தொடங்கி அசத்தினார். வழக்கம்போல மருதாணி அப்பிய விரல்களின் மென்மையான வாசிப்பை கச்சேரி முழுதும் வெளிப்படுத்தினார்.
சுமித்ராவின் குரல் சுவாசக் கட்டுப்பாடுகள் அபாரம். ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என்று அனைத்து அங்கங்களும், கூச்சலோ கீச்சுக்குரலோ இன்றி மதுரமாகவே வெளிப்படுகின்றன. அகாரங்களில் அளவுக்கதிகமான திளைத்தல்களோ ராக ஸ்வரங்களில் ஏறி இறங்கும் கற்பனை வறட்சிப் பாசாங்குகளோ கிடையாது.
சுமித்திராவின் கலை பாரம்பர்ய செவ்வியல் இசைவடிவம் என்றால், குலையாமல் அதைப் படைப்பூக்கத்துடன் வெளிப்படுத்தும் அவர் திறன், வேதவல்லியின் பாடாந்தரத்தில் பத்திரமாகப் பொதிந்துள்ளது.
ரசிகர்கள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நல்லிசை விருந்தை இவரிடம் எதிர்பார்க்கலாம்.

