ADDED : ஏப் 22, 2026 11:13 PM
சென்னை:திருவண்ணாமலை அருகே, 15 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக டி.ஜி.பி.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த கல்பட்டு கிராமத்தில் உள்ள, அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, கடந்த 19ம் தேதி சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு தனியாக, இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். அப்போது, சீம்பலம் என்ற இடத்தில், எட்டு பேரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு இச்சம்பவம் சாட்சி' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இன்று, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இச்சம்பவம் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை கேட்டு, டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை, தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சிறுமி மீதான இந்த கொடூர தாக்குதல், பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இதுபோன்ற ஈவிரக்கமற்ற குற்றங்களுக்கு எதிராக , வலுவான தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும். சிறுமியருக்கு எதிரான வன்முறை என்பது பெரும் மனித உரிமை மீறல்.
சிறுமி மீதான மிருகத்தனமான செயலை , தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி பொறுப்புக்கூறலும் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம்.
'பாரதிய நியாய சம்ஹிதா' மற்றும் ' போக்சோ ' சட்டத்தின் கீழ், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, நியாயமான காலவரையறைக்குள் விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விரிவான மருத்துவ ஆலோசனை, மறுவாழ்வு, பாதுகாப்பு ஆதரவை, தமிழக டி.ஜி.பி., வழங்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐந்து நாட்களுக்குள், டி.ஜி.பி., விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***
