/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படுமோசமான பூந்தமல்லி பேருந்து நிலையம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
/
படுமோசமான பூந்தமல்லி பேருந்து நிலையம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
படுமோசமான பூந்தமல்லி பேருந்து நிலையம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
படுமோசமான பூந்தமல்லி பேருந்து நிலையம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
ADDED : நவ 09, 2024 12:43 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 80,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பூந்தமல்லி, சென்னை பெருநகரத்திற்கும், மேற்கு பகுதி மாவட்டங்களுக்குமான நுழைவாயிலாக உள்ளது.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை மவுன்ட் - பூந்தமல்லி சாலை, ஆவடி- - கரையான்சாவடி சாலை, குன்றத்துார்- - கரையான்சாவடி சாலை ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாகவும் பூந்தமல்லி உள்ளது.
சென்னை புறநகரில் பூந்தமல்லி நகராட்சி உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்கள் போக்குவரத்து வசதிக்காக, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிரச்னைகள் என்ன?
கட்டண கழிப்பறை நான்கு மாதங்களாக மூடிக் கிடக்கிறது. இதற்கு மாற்றாக, அண்மையில் கட்டப்பட்ட சிறிய கழிப்பறை கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டு உள்ளது. இதில் உள்ளே நான்கு கழிப்பறைகள் மட்டும் இருப்பதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை உபாதைகள் கழிக்க வேண்டியுள்ளது.
பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் இலவச கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றத்தால், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வசதி இல்லை. இதனால், பயணியர் கட்டணம் கொடுத்து, குடிநீர் குடிக்க வேண்டியுள்ளது.
பூந்தமல்லி நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள், பேருந்து நிலையத்தின் உள்ளே ஆக்கிரமித்து இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல் ஏற்படுவதால், அந்த வழியே செல்ல வேண்டிய பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளே நுழைந்து செல்வதால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை திருப்ப முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
பேருந்து நிலைய கட்டடங்களில் 'போஸ்டர்' ஒட்டப்பட்டு, அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது.
24 மணி நேரம் அரசு பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே போதையில் படுத்து துாங்குவதால், பயணியர் அச்சமடைகின்றனர்.
பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் பயணியரை ஏற்றிச் செல்ல மினி வேன்களும், பேருந்து வெளியேறும் பகுதியில் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது.
பேருந்து நிலைய வளாகம் பராமரிப்பின்றி, குப்பை நிறைந்துள்ளது. பாக்கு கரைகள் தரைகள், சுவரில் படிந்து அலங்கோலமாக உள்ளது.
பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேறும் 60க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், பயணியருக்கு இடையூறாக உள்ளன.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில், இந்த நிலையம் படுமோசமான பராமரிப்பில் உள்ளது.
பூந்தமல்லியில், மேட்ரோ மேம்பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெற்று, சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பூந்தமல்லியை அழகுபடுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசியல் தலையீடு
பூந்தமல்லி நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவித்துள்ளோம். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன், மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்கிறது. கட்டண கழிப்பறை சீரமைக்கப்படும். பேருந்து நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்-.
இவ்வாறு, அவர் கூறினார்.