/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம், போரூரில் பயணியரை ஏற்ற ஆம்னி பஸ்களுக்கு அனுமதி
/
தாம்பரம், போரூரில் பயணியரை ஏற்ற ஆம்னி பஸ்களுக்கு அனுமதி
தாம்பரம், போரூரில் பயணியரை ஏற்ற ஆம்னி பஸ்களுக்கு அனுமதி
தாம்பரம், போரூரில் பயணியரை ஏற்ற ஆம்னி பஸ்களுக்கு அனுமதி
ADDED : பிப் 08, 2024 12:47 AM
சென்னை,'சென்னையில், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில், பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்க, போக்குவரத்து துறை ஆணையர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னையில், குறிப்பிட்ட இடங்களில் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்கும்படி கோரினர்.
இவ்வழக்கு, நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து, அரசுடன் பேசி தீர்வு காணும்படி, நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து, கடந்த 3ம் தேதி அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சு நடந்தது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில், பயணியரை ஏற்றி, இறக்க, அனுமதி அளிக்கவும், பெருங்களத்துாரில் பயணியரை இறக்க மட்டும் அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''கோயம்பேடில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் உள்ளது. அங்கிருந்து பயணியரை ஏற்ற அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, 'அனைத்து இடங்களிலும் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்லும் முன், பேருந்துகள் நிரம்பி விடும்.
புதிய பேருந்து நிலையம் வந்ததன் நோக்கம் வீணாகி விடும்' என தெரிவித்த நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் காணப்பட்டு அதற்கான வரைபடம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
விசாரணையை, நாளைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

