/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அவசர வாகனங்களுக்கு இடையூறு கோவிலை அகற்ற உத்தரவு
/
அவசர வாகனங்களுக்கு இடையூறு கோவிலை அகற்ற உத்தரவு
ADDED : பிப் 19, 2024 02:03 AM
சென்னை:'சூளை பகுதியில், அவசர கால வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கோவிலை, ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் தாக்கல் செய்த மனு:
தங்கள் பகுதியில் உள்ள சந்தியப்பா மற்றும் பயலபச்சையப்பா தெரு இடையே, ஒரு சிலர் உரிய அனுமதி பெறாமல் கோவில் கட்டி, கருமாரியம்மன், துர்க்கையம்மன் சிலைகளை நிறுவி உள்ளனர்.
திருவிழாக் காலங்களில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்தாண்டு ஜூலை 27ல், மாநகராட்சி கமிஷனர், புரசைவாக்கம் தாசில்தார் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்தேன்.
ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புகார் மனுவை பரிசீலிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கோவில் கட்டுமானத்தால் பொது பாதையின் அகலம் சுருங்கியது, புகைப்படங்கள் வாயிலாக தெரிகிறது.
இதே இடத்தில் கோவிலை தொடர அனுமதித்தால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இவற்றால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மத உணர்வு சார்ந்தது எனக் கருதி, மக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையில், எவ்வித ஆக்கிரமிப்பையும் அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. இதில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது.
எனவே, மனுதாரர் குறிப்பிடும் கோவிலை அகற்ற அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான நடவடிக்கையை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆறு மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.
தற்போதுள்ள கோவிலை அருகிலுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான இடத்தை, நான்கு மாதத்துக்குள் மாவட்ட கலெக்டர் கண்டறிய வேண்டும்.
மாற்று இடத்தைக் கண்டறிவதில் சிரமம் இருந்தால், கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் இருந்து பணம் வசூலித்து மாற்று இடத்தை கண்டறியலாம். கோவிலை இடமாற்றம் செய்ய, அதிகாரிகள் போதிய அவகாசம் வழங்க வேண்டும்.
தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவிலை, ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும். மனுதாரர், சட்ட விதிகளுக்கு மாறாக அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தால், அவர் மீதும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

