/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் உறுப்பு தானம் நால்வருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்பு தானம் நால்வருக்கு மறுவாழ்வு
ADDED : அக் 07, 2024 01:19 AM
சென்னை:ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ், 47. ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 3ம் தேதி துாக்கத்தில் இருந்து எழுந்தவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, அவர் சுயநினைவை இழந்திருந்தார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தபோது, அவரின் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. அவை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார்.
இதை அவரின் குடும்பத்தினர் அறிந்ததும், விஜயராஜின் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர். பின், அவரின் ஒரு சிறுநீரகமும் கால் எலும்புகளும் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கும், விழி வெண்படலம் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதனால், உறுப்புகள் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
உறுப்புகளை தானமளித்து, உயிர் நீத்த விஜயராஜின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மரியாதை செலுத்தினர்.