/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனை நையப்புடைத்த கும்பல் பங்குச்சந்தையில் பல கோடி ஏமாற்றியதால் ஆத்திரம்
/
திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனை நையப்புடைத்த கும்பல் பங்குச்சந்தையில் பல கோடி ஏமாற்றியதால் ஆத்திரம்
திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனை நையப்புடைத்த கும்பல் பங்குச்சந்தையில் பல கோடி ஏமாற்றியதால் ஆத்திரம்
திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனை நையப்புடைத்த கும்பல் பங்குச்சந்தையில் பல கோடி ஏமாற்றியதால் ஆத்திரம்
ADDED : நவ 26, 2025 03:14 AM

பல்லாவரம்: திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனை நையப்புடைத்த கும்பலால் சிட்லப்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்டோர் தாக்கியது தெரியவந்தது. இரு தரப்பு புகார்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் கிளிண்டன், 30. இவர், 'ஆலிவர் ட்ரேட் பிரோ' என்ற பெயரில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்து 'ஆன்லைன்' வகுப்பு நடத்தி வருகிறார்.
இருதினங்களுக்கு முன், குரோம்பேட்டை அருகே சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில், இவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, திடீரென மண்டபத்தில் புகுந்த பெண்கள் உட்பட ஒரு கும்பல், மணக்கோலத்தில் இருந்த கிளிண்டனை மேடையில் இருந்து இழுத்து, கீழே கொண்டு வந்து சரமாரியாக தாக்கினர்.
உறவினர்கள் கிளிண்டனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின், சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிளிண்டன் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
கடந்த 2023ல், பங்குச்சந்தை வகுப்பு மூலம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மோகனபிரியா, 35 என்பவர், கிளிண்டனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அவரிடம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக, கிளிண்டன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய மோகனபிரியா, அவரிடம் பல்வேறு தவணைகளாக, 75 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதலீடு செய்த 75 லட்சம் ரூபாயையும் வர்த்தகத்தில் இழந்துவிட்டதாக, கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
இழந்த பணத்தை மீட்க, கூடுதல் பணம் தேவை என கிளிண்டன் கூறியதையடுத்து, தன் 'ஆடி' காரை விற்று, 12 லட்சம் ரூபாயும், சொத்தை அடமானம் வைத்து, 40 லட்சம் ரூபாயும் மோகன பிரியா கொடுத்துள்ளார். அதன்பின்னும், பணத்தை திருப்பி தராமல் கிளிண்டன் ஏமாற்றி வந்துள்ளார்.
கிளிண்டனிடம் இருந்து பணத்தை மீட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏற்கனவே தாம்பரம் கமிஷனரகத்தில் மோகனபிரியா புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கிளிண்டனுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பது அறிந்த மோகனபிரியா மற்றும் கிளிண்டனால் பாதிக்கப்பட்டோர், மண்டபத்திற்குள் புகுந்து தாக்கி உள்ளனர்.
இவ்வாறு தெரிய வந்தது.
இந்த நிலையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, பணத்தை பெற்று மோசடி செய்த கிளிண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மோகனபிரியா தரப்பும் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இரு புகார்கள் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

