/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துள்ளிக்குதித்து திமிறி ஓடும் காளைகள்; அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
/
துள்ளிக்குதித்து திமிறி ஓடும் காளைகள்; அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
துள்ளிக்குதித்து திமிறி ஓடும் காளைகள்; அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
துள்ளிக்குதித்து திமிறி ஓடும் காளைகள்; அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
UPDATED : ஜன 15, 2026 05:40 PM
ADDED : ஜன 15, 2026 07:37 AM

மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு கோலாகலமாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், திமிறி வரும் காளையை மாடு பிடிவீரர்கள் தீரத்துடன் பாய்ந்து பிடித்து வருகின்றனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவையாகும்.
அதன்படி, பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3,090 காளைகளும், 1,849 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தகுதிவாய்ந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில், பார்வையாளர்கள் அமரும் இரும்பு தடுப்பு மேடை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை கலெக்டர் முன்னிலையில் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் துவங்கி வைத்தனர். பின்னர், கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு, ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. துள்ளிக்குதித்து திமிறி ஓடும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி வருகின்றனர்.
11 சுற்றுகளின் முடிவில், 764 காளைகள் களம் கண்டுள்ளன. அதில் 149 காளைகள் பிடிபட்டு விட்டன. ஒரு சுற்றில் 3 காளைகளை பிடிப்பவர்கள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற நிலையில், இறுதிச்சுற்றுக்கு 18 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல, இதுவரையில் ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முன்னிலையில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக, அவனியாபுரம் கார்த்தி 16 காளைகளை அடக்கி 2வது இடத்திலும், அவனியாபுரத்தைச் கார்த்திக் 10 காளைகளுடன் 3 வது இடத்திலும், உள்ளனர்.
முதல்வர் பரிசு
முதல் பரிசை வெல்லும் காளைக்கு முதல்வர் சார்பில் காரும், துணை முதல்வர் சார்பில் டிராக்டரும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல, வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு தங்க காசுகள், வெள்ளி காசுகள், சைக்கிள், அண்டா என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
4 பேருக்கு சிகிச்சை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 3வது சுற்று நடந்து வரும் நிலையில், இதுவரை 12 மாடுபிடி வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். வத்திராயிருப்பு ஹரி விக்னேஷ் 22, தத்தநேரி சூர்யா 25, மேலூர் அஜய் 20, தேனூர் கோகுல செல்வன் 28 ஆகியோர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தள்ளுமுள்ளு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை பரிசோதிக்கும் இடத்தில் ஒரே நேரத்தில் பல காளைகளுடன் உரிமையாளர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

