/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
/
போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
ADDED : ஜன 12, 2026 05:13 AM

சென்னை: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான, இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், போரூர் - வடபழனி இடையே 6 கி.மீட்டருக்கு நேற்று நடந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
அடுத்த மாதத்திற்குள் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, 116 கி.மீ., தொலைவுக்கு, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இதில் கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ., வழித்தடத்தில், பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீட்டருக்கு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது.
இத்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக போரூர் - வடபழனி இடையே கட்டமைப்பு, சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இவற்றை சோதிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சோதனை நேற்று நடத்தப்பட்டது. 10 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு, 6 கி.மீ., துாரமுள்ள வடபழனியை வந்தடைந்தது.
தண்டவாள செயல்திறன், சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டி இணைப்பு திறன் ஆகியவை குறித்து கண்காணிக்கப்பட்டது. 45 நிமிடம் நடந்த இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் சித்திக் கூறியதாவது:
பூந்தமல்லி - போரூர் வரை, ஜூனில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது போரூர் - வடபழனி வரையிலான சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மாத இறுதிக்குள், இத்தடத்தில் 35 - 40 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை செய்யப்படும். இதையடுத்து, பூந்தமல்லி - வடபழனி இடையே, பிப்., இரண்டாவது வாரத்திற்குள், மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.
போரூருக்கு அடுத்து வடபழனியில் தான், மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். இதற்கிடையே உள்ள ரயில் நிலையங்கள் படிப்படியாக தயார் செய்து, நான்கு மாதங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்த உள்ளோம். வடபழனி வரை இணைப்பு கொடுப்பதால், இப்பகுதியில் தானியங்கி சிக்னல் முறை இல்லாமல், ஓட்டுநரால் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பாதை அமைத்து, போக்குவரத்து இணைப்பு கொடுத்தால்தான் பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், முதற்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்களுடனும் தொடர்பு கிடைக்கும்.
பூந்தமல்லி, போரூரில் இருந்து வரும் பயணியர் வடபழனியில் இறங்கி, சென்ட்ரல், விம்கோ நகர் உள்ளிட்டட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். அதுபோல், விம்கோ நகர், சென்ட்ரலில் இருந்து வரும் பயணியர் வடபழனியில் இருந்து மாறி, பூந்தமல்லிக்கு செல்ல முடியும்.
போரூர் - பவர்ஹவுஸ் வரை மெட்ரோ ரயில் பாதையை வரும், ஜூனில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கோயம்பேடு - வர்த்தக மையம் பணியையும் விரைவாக முடிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினர்.

