/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்
/
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்
UPDATED : ஜூலை 22, 2025 12:52 PM
ADDED : ஜூலை 22, 2025 12:25 AM

சென்னை ; வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தி.மு.க., பெண் கவுன்சிலர் வீடு, வணிக கட்டடங்களை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடத்தை மீட்கக்கோரி, சமூக ஆர்வலர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னையில் மாநகராட்சியில் கவுன்சிலர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.
இதை சரிக்கட்டும் வகையில், திருவொற்றியூர் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், பெருங்குடியைச் சேர்ந்த 189 வது வார்டு கவுன்சிலர் பாபு ஆகிய இருவரும் அதிரடியாக, கவுன்சிலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கவுன்சிலர்கள், தாங்களாக பதவி விலக வேண்டும்; இல்லாவிட்டால் பதவி பறிக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தி.மு.க., கவுன்சிலர்கள் இஷ்டம்போல் ஆட்டம்போட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் ஒருவர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின், 53வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த பா.வேளாங்கண்ணி. இவர், மூலக்கொத்தளத்தில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 1,200 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, வீடு, கடைகளை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிலத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டுமானம் மேற்கொண்டு வரும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசு நிலத்தை மீட்க வேண்டும் என, சென்னை முழுதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
அரசின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஆளுங்கட்சி கவுன்சிலரே இப்படி செய்யலாமா என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையே, மூலக்கொத்தளம் கொள்ளாபுரி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் லோகேஸ்வரி, ராயபுரம் மண்டல அலுவலர் பரிதா பானுவிடம் அளித்த மனு:
என் வீட்டில் இருந்து, சி.பி.சாலை வழியாக, என் கணவருடன் இருசக்கர வாகனத்தில் தினமும் உயர் நீதிமன்றம் சென்று வருகிறேன்.
மாநகராட்சி 53வது வார்டில் உள்ள மூலக்கொத்தளம், சி.பி., சாலையின் இருபுறங்களும் உள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேளாங்கண்ணியின் அனுமதியோடு அமைக்கப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கவுன்சிலர் வேளாங்கண்ணி, நடைபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார். இதை மாநகராட்சி அதிகாரிகளும் தட்டிக்கேட்க முடியவில்லை; போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் தினமும் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.
எனவே, சட்ட விரோத ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வீடு கட்டும் இடத்தையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.