/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருப்பு கொடி ஏந்தி நலச்சங்கத்தினர் மறியல்
/
கருப்பு கொடி ஏந்தி நலச்சங்கத்தினர் மறியல்
ADDED : பிப் 21, 2024 02:31 AM
குரோம்பேட்டை:குரோம்பேட்டை வைஷ்ணவா ரயில்வே கேட் பகுதியை, ராதா நகர், நன்மங்கலம், பாரதிபுரம், உட்பட, 25 பகுதிகளைச் சேர்ந்த, 2 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இப்பகுதியினர் வசதிக்காக, ரயில்வே கேட்டில், கனரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.
கடந்த 2014ல், 60 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நிதி காரணமாக ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், வைஷ்ணவா ரயில்வே கேட்டில், நகரும்படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கனரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க வலியுறுத்தியும், தாம்பரம் மாநகராட்சி 2 - 3 மண்டல குடியிருப்போர் நலவாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், கருப்பு கொடி ஏந்தி, நேற்று போராட்டம் நடத்தினர்.
ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் வந்து சமரசப்படுத்தி, அனைவரையும் கலைத்தனர்.

