/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் பொது இடங்கள் கபளீகரம்!: மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை?
/
கொளத்துாரில் பொது இடங்கள் கபளீகரம்!: மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை?
கொளத்துாரில் பொது இடங்கள் கபளீகரம்!: மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை?
கொளத்துாரில் பொது இடங்கள் கபளீகரம்!: மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை?
UPDATED : ஜன 23, 2026 11:05 PM
ADDED : ஜன 23, 2026 05:03 AM

சென்னை, கொளத்துார் மற்றும் திரு.வி.க., நகர் பகுதிகளில், பொது பயன்பாட்டு இடங்கள், அடுத்தடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி வருகின்றன. தடுக்க வேண்டிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கும்பலுடன் கைகோர்த்து செயல்படுவதாக குடியிருப்போர் நலச்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க., நகரில், நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், 1951 - 56 ஆண்டுகளில், தொழில் துறை சார்பில், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டது.
திரு.வி.க., பெயரில், 21 ஏக்கரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தில், 544 தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 1997ம் ஆண்டு, 544 பேருக்கும் சொந்தமாக்கி, அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
போலி ஆவணங்கள்
இந்த வீட்டு வசதி திட்டத்தில், 1.9 ஏக்கர் நிலம், சமுதாய நலக்கூடம், சிறுவர் பூங்கா, நுாலகம் போன்ற பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது.
வீட்டு வசதி வாரிய பராமரிப்பில் உள்ள பொது இடத்தின் ஒரு பகுதியை, போலி ஆவணங்கள் வாயிலாக, சில ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனம் பெயரில் சிலர் ஆக்கிரமித்தனர். மீதமுள்ள நிலத்தின் ஒரு பகுதியை, மற்றொரு கும்பல் ஆக்கிரமித்தது. இந்த வகையில், 10 கோடி ரூபாய் மதிப்பு இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியது.
இதுகுறித்து, திரு.வி.க., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், உயர் நீதிமன்றம் வரை சென்றனர். கடந்த 2024 பிப்., 21ல், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் ஆக்கிரமிப்பை அகற்றாமல், அதிகாரிகள் அமைதி காத்து வருகின்றனர்.
மேலும், நகரில் உள்ள, 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 சதுர அடி இடம், சமுதாய நலக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தையும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன், ஒரு கும்பல் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திரு.வி.க., நகர் குடியிருப்போர் நலச்சங்க துணை தலைவர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, ஆக்கிரமிப்பை மீட்க, உயர் நீதிமன்ற உத்தரவு பெற்றோம். அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
மிரட்டல்
இந்நிலையில், சமுதாய நலக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட, 5,000 சதுர அடி இடத்தில், 'சமுதாய நல கூடத்திற்கான இடம்' என, அறிவிப்பு பலகை வைத்தோம்.
நாங்கள் வைத்த பலகையை, மாநகராட்சி அதிகாரி அகற்றி விட்டார். கேட்டால், 'யாரை கேட்டு அறிவிப்பு பலகை வைத்தீர்கள்' என, மிரட்டுகிறார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக அதிகாரிகளே இருப்பதால், ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கொளத்துார் பகுதியில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வண்ணான்குளத்தை மீட்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
- நமது நிருபர் -:

