/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறை 'சர்வே'
/
வடபழனி காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறை 'சர்வே'
வடபழனி காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறை 'சர்வே'
வடபழனி காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறை 'சர்வே'
ADDED : மார் 16, 2024 12:11 AM

வடபழனி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையடுத்து, வடபழனி 100 அடி சாலையில் வெள்ளம் தேங்க காரணமாக இருந்த, காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று, 'சர்வே' மேற்கொண்டனர்.
சென்னையில் 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த மழையின் போது, வடபழனி 100 அடி சாலை திருநகர் அருகே, குளம்போல மழைநீர் தேங்கியது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கனமழையின் போது, வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்குவது வாடிக்கை.
இதற்கு காரணம் வடபழனி, திருநகர் வழியாகச் செல்லும் காவாங்கரை கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான்.
காவாங்கரை கிளை கால்வாய், கோயம்பேடு புல் கால்வாயில் இருந்து பிரிந்து வடபழனி, திருநகரில் துவங்கி, எம்.எம்.டி.ஏ., சூளைமேடு வழியாக, கூவம் ஆற்றில் கலக்கிறது.
இந்த கால்வாய், 30 அடி அகலம், 4 கி.மீ., நீளம் கொண்டது. விருகம்பாக்கம் மேம்பாட்டு திட்டத்தில், இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.
இதற்காக, கடந்த 1987ல், திருநகர் பகுதியிலுள்ள 2,345 சதுர அடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது. நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் கண்காணிக்காததால், திருநகரில் இந்த கால்வாய்க்குள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டன.
சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., பகுதியில், இந்த கால்வாயின் தடம் தெரியாமல் மாயமாகியுள்ளது. கடந்த 1992ல், எம்.எம்.டி.ஏ., நில ஆர்ஜித பிரிவின் சிறப்பு தாசில்தார் காதர்கனி என்பவர், காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஆனால், பொதுப்பணித் துறை அந்த கடிதம் குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், வடபழனி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த 2016ம் ஆண்டு முதல், தொடர்ந்து நம் நாளிதழில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு
காவாங்கரை கிளைக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வடபழனி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்த தேவா என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, 2018 மே மாதம், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்த 42 பேருக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், இதுவரை அகற்றப்படவில்லை.
இதன் காரணமாக, சமீபத்தில் பெய்த மழையில், வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், ஆக்கிரமிப்பு குறித்து 'சர்வே' செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில், காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று, வடபழனி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்தனர்.
இந்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் அத்துமீறல்
கால்வாய் ஆக்கிரமிப்புகள் 'சர்வே' குறித்து புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிகை புகைப்பட கலைஞரை, அங்கிருந்த மக்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர்.
அங்கிருந்த போலீசாரும், புகைப்படக் கலைஞரின் கேமராவை வாங்கி, அவர் எடுத்த படங்களை அழித்துள்ளனர். மேலும், அவரது மொபைல் போனையும் சோதனை செய்தனர்.
பத்திரிகை சுதந்திரத்தை மீறும் அளவிற்கு, புகைப்படக் கலைஞரின் கேமராவை வாங்கி, புகைப்படங்களை அழிக்க போலீசாருக்கு யார் உரிமை வழங்கினர் என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

