ADDED : பிப் 24, 2024 12:09 AM
நன்மங்கலம், சென்னையில் மழைநீர் தேங்காதபடி, நகரம் முழுதும் வடிகால் அமைக்க, 2022ல் ஆகஸ்டில், தமிழக அரசு பணியை துவக்கியது.
அதன்படி, பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையேயான ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, சாலையின் இருபுறமும் சேர்த்து, 10,330 மீட்டர் துாரத்திற்கு வடிகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
கடந்த 2022, ஆகஸ்டில், 140 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் பணிகள், 2023, மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை, 40 சதவீதம் கூட நடந்ததாக தெரியவில்லை.
கடந்த டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல் மழையால், பள்ளிக்கரணை, சுண்ணாம்புகொளத்துார், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க, வடிகால் பணிகள் முடிக்காததே முக்கிய காரணமாக அமைந்தது.
இரு மாதங்களாக, ரேடியல் சாலையில் பல இடங்களில் வடிகால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.