/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய குளங்களில் சேகரமாகும் மழைநீர்... 22.50 லட்சம் கன அடி! வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
/
புதிய குளங்களில் சேகரமாகும் மழைநீர்... 22.50 லட்சம் கன அடி! வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
புதிய குளங்களில் சேகரமாகும் மழைநீர்... 22.50 லட்சம் கன அடி! வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
புதிய குளங்களில் சேகரமாகும் மழைநீர்... 22.50 லட்சம் கன அடி! வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
ADDED : நவ 10, 2024 12:18 AM

சென்னை,
''வேளச்சேரி மற்றும் கிண்டியில் வெட்டப்படும் புதிய குளங்களில், மழைக்காலத்தில் 22.50 லட்சம் கனஅடி தண்ணீர் சேகரிக்க முடியும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
வேளச்சேரியில் ரயில் நிலையம் அருகில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில், குளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நேற்று பார்வையிட்டார்.
பின் அமைச்சர் அளித்த பேட்டி:
சென்னை, ஒவ்வொரு பருவமழைக்கும் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி வந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளாக வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலா தலம்
முதல்வர் ஸ்டாலின், 2006ல் துணை முதல்வராக இருந்தபோது, வேளச்சேரியில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இந்த பணியை அடுத்து வந்த அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் செய்திருந்தால், கடந்தாண்டு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
கடந்த காலங்களில், 5 - 6 செ.மீ., மழை பெய்தாலே பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். தற்போது, 20 செ.மீ., மழை பெய்தாலும் பாதிக்காத வகையில் பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேளச்சேரியை பொறுத்தவரையில் 100க்கும் மேற்பட்ட நகர்கள், மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த மாதம், வேளச்சேரி பகுதியை, முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக, இங்கு 5 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு இடம் இருந்தது. இவை தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இதில், தடுப்பு அமைத்தால் மீண்டும் ஆக்கிரமிக்கவும், ஏதாவது ஒரு ஆவணங்களை காட்டி நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
இதனால், இதை நீர்நிலையாக மாற்ற முடிவு செய்து, மாநகராட்சி சார்பில் 13,800 சதுர மீட்டர் பரப்பில் குளம் அமைக்கப்படுகிறது.
இதோடு, 2,500 சதுர மீட்டர் பரப்பில் கரையை பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா அமைக்கப்படும். குளத்தில், 12.50 லட்சம் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அடுத்த ஆறு மாதத்தில், தென் சென்னையில் மற்றுமொரு ஒரு சுற்றுலா தலமாக இந்த இடம் மாறும்.
10 லட்சம் கன அடி
கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில், 10 லட்சம் கன அடி தண்ணீர் சேமிக்கும் வகையில் நான்கு குளங்கள் வெட்டப்படுகின்றன. சென்னையில், பல நீர்நிலைகள் காணாமல் போன நிலையில், புதிய நீர்நிலைகளை அமைத்து வருகிறோம்.
இதன் வாயிலாக, சென்னை மாநகர வரலாற்றில், புதிய அத்தியாயம் துவங்கி இருக்கிறது.
புதிதாக அமைக்கும் நீர்நிலைகளில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் வராமல் இருக்க, நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தேங்கும் வெள்ளத்தை, ஒக்கியம்மடு வழியாக பகிங்ஹாம் கால்வாய் கொண்டு செல்வதில் சிரமம் இருந்தது.
வெள்ளம் தடையின்றி செல்லும் வகையில், ஒக்கியம்மடு பகுதியில் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான இடத்தை பெற்று, அதில் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, தென் சென்னை பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுப்பதுடன், குளங்கள் வெட்டுவதால் கோடைக்காலத்தில் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் ஏதுவாகவும் உள்ளது.
இந்த பணிகளை மாநகராட்சி, நீர்வளத்துறை சிறப்பாக செய்து வருகிறது. சில பகுதிகளில், தவிர்க்க முடியாத காரணங்களால் நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்கிறது.
இந்த பிரச்னையை தடுக்க, மாநகராட்சியுடன், குடிநீர் வாரியமும் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவாக்க பகுதியில் கழிவுநீர் திட்ட பணிகள், நுாறு சதவீதம் முடிந்ததும், பொதுமக்களும் நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு தரும்போது, கழிவுநீர் பிரச்னைக்கு முழு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி மேயர் பிரியா, தென் சென்னை தொகுதி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், கமிஷனர் குமரகுருபரன், தெற்கு வட்டார துணை கமிஷனர் அமித், அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.