/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
/
கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
ADDED : ஜன 19, 2026 05:57 AM
சென்னை: இழப்பீடு தராமல், அபராதம் செலுத்த மறுத்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது.
பூந்தமல்லி அடுத்த பாலேரிபட்டு பகுதியில், 'ஆப்டிமா ஹோம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் குடியிருப்பு கட்டப்படுகிறது. இதில் வீடு வாங்குவதற்காக, ஜி.பாஸ்கரன் என்பவர், கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, 40.26 லட்சம் ரூபாயை செலுத்தினார். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், கட்டுமான பணிகள் நடக்கவில்லை.
இதனால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 'ஆப்டிமா ஹோம்ஸ்' நிறுவனம் மீது பாஸ்கரன் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம், பாஸ்கரன் செலுத்திய 40.26 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித்தரவும், 1.50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும், கட்டுமான நிறுவனத்திற்கு, 2023ல் உத்தரவிட்டது.
ஆனால், அந்நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை; அபராதமும் செலுத்தவில்லை. இதுதொடர்பாக, பாஸ்கரன் மீண்டும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஆணைய உத்தரவின்படி, மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லை. அதே நேரம், ஆணையத்தில் அபராதத்தையும் செலுத்தவில்லை.
எனவே, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக, வருவாய் மீட்பு சட்ட விதிகளின்படி, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

