ADDED : செப் 19, 2024 12:15 AM

சோழிங்கநல்லுார், சென்னை கலெக்டர் அலுவலகம் கீழ் உள்ள, 17 தாலுகாக்களில், சோழிங்கநல்லுார் தாலுகா அதிக பரப்பு உடையது.
இங்கு, அரசு நிலங்கள் அதிகமாக உள்ளன. அதேபோல், ஆக்கிரமிப்பும் அதற்கு ஏற்ப உள்ளது.
கடந்த ஓராண்டில் வருவாய் துறை நேரடியாகவும் மற்றும் நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலும், 77.24 ஏக்கர் இடம் மீட்டப்பட்டது. இதன் சந்தை மதிப்பு, 2,191 கோடி ரூபாய்.
மீட்கப்பட்ட இடத்தில், 62.07 ஏக்கர் இடம், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அதில், 10 ஏக்கர் இடம், சோழிங்கநல்லுாரில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகம் கட்ட ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஓ.எம்.ஆர்., கொட்டிவாக்கத்தில் மீட்ட, 2.53 ஏக்கர் இடத்தில், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சோழிங்கநல்லுார் தாலுகாவை பிரித்து, பள்ளிக்கரணை தாலுகா உருவாக்க முடிவு செய்து, அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது.
அப்படி பள்ளிக்கரணை தாலுகா உருவாகும்போது, தாலுகா அலுவலகத்தை, வேளச்சேரி - தாம்பரம் சாலையில் உள்ள, 1.38 ஏக்கர் இடத்தில் கட்ட ஒதுக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள இடங்கள், வருவாய்த்துறை வசம் உள்ளது. இந்த இடங்களை, மீண்டும் ஆக்கிரமிக்காத வகையில், வருவாய் துறை சார்பில் தடுப்பு வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.