/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனி தீவாகி தவித்த போஜராஜன் நகர் மக்களுக்கு நிம்மதி 40 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வருகிறது
/
தனி தீவாகி தவித்த போஜராஜன் நகர் மக்களுக்கு நிம்மதி 40 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வருகிறது
தனி தீவாகி தவித்த போஜராஜன் நகர் மக்களுக்கு நிம்மதி 40 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வருகிறது
தனி தீவாகி தவித்த போஜராஜன் நகர் மக்களுக்கு நிம்மதி 40 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வருகிறது
ADDED : ஆக 07, 2025 12:25 AM

வண்ணாரப்பேட்டை, :மூன்று பக்கமும் ரயில்வே டிராக்குகளில் சிக்கியதால், சரியான போக்குவரத்து வசதியின்றி, வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மக்கள், 40 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தீர்வு காண துவங்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளும், 14 ஆண்டுகளுக்கு பின் முடிந்து வந்துள்ளதால், இந்த பகுதி மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இதன் வழியே தினமும், சென்ட்ரலில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இந்த ரயில்கள் வரும் சமயத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. அதை திறப்பதற்கு, 30 நிமிடங்களுக்கும் மேலாகிறது.
ஒவ்வொரு முறை ரயில் கடக்கும்போதும், மின்ட் மாடர்ன் சிட்டி, போஜராஜன் நகர், சீனிவாசபுரம், கண்ணன் தெரு பகுதிமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், தண்டவாளத்தை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடக்கின்றனர்.
மாணவ - மாணவியர், முதியவர்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இறுதி ஊர்வலம் கூட செல்ல முடியாமல், தண்டவாளம் முன் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தவிர, அவசரத்திற்காக உயிரை பணயம் வைத்து, கேட் பகுதியை கடந்து செல்லும்போது, பாதசாரிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்தன. அதனால், இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென 40 ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் போராடி வந்தனர்.
இதையடுத்து, 2010ல், போஜராஜன் நகரில் சுரங்கப்பாதை அமைப்படும் என, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியால், 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் துவங்கிய நிலையில், திடீரென பணி கிடப்பில் போடப்பட்டது.
பின், 2016ல், சென்னை மாநகராட்சியும், தெற்கு ரயில்வேயும், 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை துவக்கியது. அந்த பணியும் பாதியில் முடங்கியது.
கடந்த 2018ல், மீண்டும் துவங்கிய சுரங்கப்பாதை பணி, ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் சுரங்கப்பாதையுடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில், ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் விழா 2022, அக்டோபரில் நடந்தது.
வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர் சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ; அகலம் 6 மீட்டர். இதில், 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் சென்னை மாநகராட்சியாலும் அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டு கால போராட்டத்திற்கு பின், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி முடிந்தது. வரும் 10ம் தேதி சுரங்கப்பாதை திறக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மக்களின் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வருகிறது.
நீண்ட போராட்டம்தான் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஜெய்சூர்யா பிரகாஷ் ரெட்டியை சந்தித்து மனு அளித்தேன். அதன் வாயிலாக, 2010ல் சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்தே, அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில் அடுத்தது சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியானது. மத்திய, மாநில அமைச்சர்கள் ஆய்வு செய்தாலும், வேலை மட்டும் மிகவும் மந்தமாகவே நடந்து வந்தது. பணியை முடிக்க நீண்ட போராட்டமே நடந்தது. ஒரு வழியாக, 14 ஆண்டுகளுக்குபின் வேலை முடிந்துள்ளது மக்களுக்கு பெரும் நிம்மதிதான். - எம்.கே.பாபுசுந்தரம், காங்., முன்னாள் கவுன்சிலர், சென்னை மாநகராட்சி.

