/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஓய்வறை
/
கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஓய்வறை
ADDED : ஜூன் 13, 2025 12:33 AM

சென்னை, சென்னையில் கட்டட தொழிலாளர்கள் காலை, மாலை நேரங்களில் வந்து அமரும் வகையில், கழிப்பறையுடன் கூடிய ஓய்வறையை, மூன்று இடங்களில் மாநகராட்சி அமைக்க உள்ளது.
சென்னை மாநகராட்சியில், உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள், வெயில், மழை உள்ளிட்டவற்றில் அவதிப்படாமல் இருக்க, குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறைக்கு, உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து சென்னையில், கொளத்துார், அயனாவரம் உள்ளிட்ட மூன்று இடங்களில், கட்டுமான தொழிலாளர்களுக்கான, 'பிக் அப் அண்ட் ட்ரான்ப் பாயின்ட்' அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
உணவு டெலிவரி பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஓய்வறை வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அதேபோல், காலை, மாலை நேரங்களில் சாலையோரங்களில் அமர்ந்து அவதிப்படும் கட்டுமான பணியாளர்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஒவ்வொரு மையத்திற்கும், 18 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. இம்மையத்தில் கழிப்பறை வசதி உள்ளிட்டவை இருப்பதால், கட்டுமான தொழிலாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் முடியும்.
இவை, ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.