UPDATED : ஜூன் 30, 2026 09:22 PM
ADDED : ஜூன் 30, 2026 07:02 PM
சென்னை:தனியார் நிறுவன ஊழியர் மீது பீர் பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 47; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றார்.
அப்போது அவரது சட்டை பையில் வைத்திருந்த பணம் மாயமானதை அறிந்து சத்தம்போட்டுள்ளார். இதைகேட்ட அங்கு இருந்த ஒருவர் பக்கத்தில் மது அருந்திக் கொண்டிருந்த இருவரை சுட்டிகாட்டி பணத்தை இவர்கள் தான் எடுத்தார்கள் எனக்கூறினார்.
அவர்களிடம் ஊழியர் பணத்தை கொடுக்கும்படி வாய்தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த ஊழியரை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி மணி, 28, ரோகித்குமார், 22 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
