/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3.66 கோடி நிலமோசடி உடந்தை நபருக்கு 'காப்பு'
/
ரூ.3.66 கோடி நிலமோசடி உடந்தை நபருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 24, 2025 11:52 PM

ஆவடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர், கடந்தாண்டு ஆக., 28ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் குறிப்பிட்டிருந்ததாவது:
என் வீட்டின் அருகே வசிக்கும் பராக் என்பவர் வாயிலாக அறிமுகமான சுரேந்தர் என்பவரிடம், திருமுல்லைவாயில், பாலாஜி நகரில் உள்ள 7,200 சதுர அடி நிலத்தை, 3.66 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். அதை, என் தந்தை அருணாச்சலம் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டேன்.
மேற்படி இடத்தில், சுற்றுச்சுவர் கட்ட சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த இடம் நாராயணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை தரை வாடகைக்கு வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரித்தபோது, சுரேந்தர் போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து இடத்தை விற்றது தெரிந்தது. நில மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இவ்வழக்கில் பாடியைச் சேர்ந்த சுரேந்தர், 53, மோசடிக்கு உடந்தையாக இருந்த பாபு, 58, அயப்பாக்கத்தைச் சேர்ந்த கமல், 46, பராக் சூடா, 46, சூளையைச் சேர்ந்த ஹரிகுமார், 50, அமைந்தகரையைச் சேர்ந்த சையது முகமது பரூக், 50, அம்பத்துாரைச் சேர்ந்த ஜஸ்டின், 45, நொளம்பூரைச் சேர்ந்த தும்மக்குடி வெங்கட கிருஷ்ணராவ், 52, ஆகியோரை கைது செய்து, கடந்த செப்., மாதம் சிறையில் அடைத்தனர்.
உடந்தையாக இருந்து, தலைமறைவாக இருந்த மண்ணுார்பேட்டை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த வசந்தா, 49, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.