/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.45 லட்சம் மோசடி: பலே நபர் சிக்கினார்
/
ரூ.45 லட்சம் மோசடி: பலே நபர் சிக்கினார்
ADDED : செப் 23, 2024 06:23 AM
குன்றத்துார் : குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம், வழுதலம்பேடு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அருண் சந்த், 37.
இவர், மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 'சீட்' வாங்கித் தருவதாகவும், ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, அந்த குடியிருப்பில் வசிக்கும், 15க்கும் மேற்பட்டோரிடம், 45 லட்சம் ரூபாய் வரை பெற்று, மோசடி செய்தார். இரண்டு ஆண்டுகளாக தலைமறைவானார்.
இந்நிலையில், குன்றத்துார் அருகே அருண் சந்த் இருப்பதை பார்த்த பணத்தை இழந்தவர்கள், அவரை மடக்கிப் பிடித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மோசடி பெண் கைது
மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தியா, 34; டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவருக்கு, ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, சாலமன் நகரைச் சேர்ந்த சாந்தினி, 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சாந்தினி, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல ஆட்களை அனுப்பினால், நல்ல கமிஷன் தருவதாக, ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி சந்தியா, தனக்கு தெரிந்தவர்கள் 15 பேரிடம், 38 லட்சம் ரூபாய் வசூல் செய்து, சாந்தினியிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தை பெற்ற சாந்தினி, வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து 2021ல், மத்திய குற்றப்பிரிவில் சந்தியா புகார் அளித்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், தலைமறைவாக இருந்த சாந்தினியை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.