/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7.40 கோடி கோவில் சொத்துகள் மீட்பு
/
ரூ.7.40 கோடி கோவில் சொத்துகள் மீட்பு
ADDED : பிப் 21, 2025 12:22 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், ஆலந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு சொந்தமான, 7.4௦ கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், நேற்று மீட்கப்பட்டன.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், கோவிலின் பின்புறம் உள்ள, என்.ஆர்.எஸ்., சாலை, கதவு எண்: 27ல், 3,440 ச.அடி., நிலம் உள்ளது.
இதை, சுந்தரேசன் என்பவருக்கு, வணிக பயன்பாட்டிற்காக வாடகை விடப்பட்டிருந்தது. அவர் வாயிலாக ஞானபிரகாசம் என்பவர், காலவரையறை கடந்து, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவின்படி, நேற்று காலை, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோவில் நிலத்தை மீட்கும் பணி நடந்தது.
அதன்படி, அறநிலையத்துறை சென்னை மண்டலம் உதவி கமிஷனர் சிவகுமார், ஆலயங்கள் நிலம் மீட்பு தனி தாசில்தார் திருவேங்கடம், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, ஆய்வாளர் அறிவுச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். கட்டடம் முழுதும் தகர செட் அடிக்கப்பட்டு, அறிவிப்பு பேனர் ஒட்டப்பட்டது.
பின், கட்டடத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், திருவொற்றியூர் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 3.4௦ கோடி ரூபாய் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்துார், ராமபுரம், வேளச்சேரி சாலை, சுப்பிரமணிய கோவில் தெரு சந்திப்பில், சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடம், அதன் அருகில், 3,565 சதுர அடியில் இருந்தது. அதை, தரணிபதி என்பவருக்கு, கோவில் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்து.
அவர் மறைவிற்குப் பின், அவரின் சகோதரர் பாலாஜி என்பவர், குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் உத்தரவுப்படி, அந்த இடம் கோவிலுக்கு எழுதி பெறப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் சரளாதேவி என்பவர், தங்களின் மூதாதையருக்கு சொந்தமான அந்த இடம், தங்களுக்கானது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த இடத்தை நேற்று மீட்டு, கோவிலின் இடம் என்பதற்கான எச்சரிக்கை பதாகை வைத்து, கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.