சடையங்குப்பம் - பர்மா நகர் மினி பஸ் இயக்க கோரிக்கை
சடையங்குப்பம் - பர்மா நகர் மினி பஸ் இயக்க கோரிக்கை
ADDED : மார் 09, 2026 05:34 AM
மணலி: மணலிபுதுநகரில் இருந்து சுங்கச்சாவடி வரை இயக்கப்படும் மினி பஸ், சடையங்குப்பம் - பர்மா நகர் வழியாக இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மணலி மண்டலம், 16வது வார்டு, சடையங்குப்பம் - பர்மா நகரில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள், பேருந்து சேவையை பெற, மணலி விரைவு சாலைக்கு ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
பள்ளி,கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியருக்கும் இதே நிலைமை தான். மேலும், நோயாளிகள் மற்றும் முதியோர்கள், மருத்துவ சேவை பெறுவதற்கும், தனி போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும், சடையங்குப்பம் - பர்மா நகர் மக்கள் பேருந்து சேவையின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில், மணலிபுதுநகரில் இருந்து, பால் பூத், ஆண்டார்குப்பம், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், விம்கோ நகர் வழியாக, சுங்கச்சாவடி வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
அதை, அதிக ஆள் நடமாட்டம் இல்லாத, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாகவே செல்வதற்கு பதிலாக, ஆண்டார்குப்பம் அடுத்த வைக்காடு சந்திப்பில் அணுகுசாலை வழியாக, பர்மா நகருக்குள் நுழைந்து, மணலி விரைவு சாலைக்கு சென்றால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
