/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் ஓடும் கழிவுநீர் நெமிலிசேரியில் அச்சம்
/
கால்வாயில் ஓடும் கழிவுநீர் நெமிலிசேரியில் அச்சம்
ADDED : டிச 08, 2024 12:10 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, ஓம்சக்தி நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இப்பகுதி கழிவுநீர், கீழ்க்கட்டளையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். ஆனால், இதற்கான முறையான குழாய் பதிக்கப்படவில்லை.
இப்பகுதியை ஒட்டி, புத்தேரியில் இருந்து கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் கால்வாயை ஒட்டி, சேகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், இந்த சேகரிப்பு மையத்தில் நிரம்பியதும், மோட்டார் வாயிலாக இறைத்து, அதை ஒட்டி செல்லும் கால்வாயில் விடப்படுகிறது.
தற்போதைய மழையில், சேகரிப்பு மையம் நிரம்பியதை அடுத்து, மோட்டார் வாயிலாக கழிவு நீர், ஏரி போக்கு கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகமே இப்படி செய்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மக்களுக்கு தொற்று நோய் பரவும் சூழலும் அதிகரித்துள்ளது.
அதனால், மாநகராட்சி கமிஷனர், இப்பகுதியில் ஆய்வு செய்து, பாதாள சாக்கடை கழிவை, ஏரி கால்வாயில் விடாமல், தனியாக குழாய் அமைத்து, கீழ்க்கட்டளை பம்பிங் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, 2 - 3வது மண்டல குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு செயலர் முருகையன் கூறியதாவது:
இப்பகுதியின் பாதாள சாக்கடை கழிவு வெளியேற, முறையான வசதி ஏற்படுத்தப்படவில்லை. மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
மேலும், நெமிலிச்சேரி ஏரியின் உபரி நீர், நன்மங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாயும், மழைக்கு முன் முறையாக துார்வாரும்படி கடிதம் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
கால்வாய் துார்வாரப்படாததால், நெமிலிச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், வேம்புலியம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.