/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்... தாராளம்! மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அட்டூழியம்
/
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்... தாராளம்! மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அட்டூழியம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்... தாராளம்! மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அட்டூழியம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்... தாராளம்! மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அட்டூழியம்
ADDED : பிப் 23, 2024 12:49 AM

சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், மழைநீர் வடிகாலில் சட்ட விரோதமாக கழிவுநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றி, இம்முறைகேடில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதிப்பதோடு, புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில், வரும் காலத்தில் இதுபோன்ற சட்ட விரோத இணைப்புகள் கொடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டபோது, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஊராட்சி, பேரூராட்சியாக இருந்த இப்பகுதிகளில், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், இங்கு வசிப்போர் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும், அப்பகுதிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனினும், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மழைக்காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்குவதும், படகு சவாரி செய்து வெளியே வருவதும் தொடர்கிறது.
மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் தென்சென்னை பகுதியில் விரிவாக்கப்பட்ட மடிப்பாக்கம், ராம் நகர், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் பல கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
கோவளம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில், இப்பகுதிகளுக்கான பணிகள், கடந்தாண்டு ஆகஸ்டில் துவங்கின. 'மிக்ஜாம்' புயல், மழைக்கு இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மடிப்பாக்கத்தில் இருந்த பழைய மழைநீர் கால்வாய் அகற்றப்பட்டு, புதிய வடிகால் அமைப்பதற்காக சமீபத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக', பழைய மழைநீர் கால்வாயில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீர் விடுவதற்காக, சட்ட விரோதமாக குழாய் இணைப்பு கொடுத்திருப்பது தெரிந்தது.
இதன் காரணமாகவே, மடிப்பாக்கம் பகுதி மழைநீர் வடிகாலில் எப்போதும் கழிவுநீர் செல்வது தெரியவந்தது. கொசு தொல்லை அதிகரித்து வந்ததும் தெரிந்தது.
பாதாள சாக்கடை திட்டம் இல்லாத இப்பகுதிக்கு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு, முறைகேடாக ஒவ்வொரு வீட்டிற்கு 5,000 ரூபாய் வரை பணம் பெற்று, இணைப்பு கொடுத்துள்ளனர்.
இந்த முறைகேடு, இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மடிப்பாக்கத்தில் 20,000 வீடுகள் உள்ளன. ஊராட்சியாக இருந்தபோது சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட இணைப்புகளை, மாநகராட்சி கணக்கெடுக்க வேண்டும்.
வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை துண்டித்து, உடனடியாக அகற்ற வேண்டும். இணைப்பு கொடுத்துள்ளோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
புதிதாக கட்டப்படும் வடிகாலில், கழிவுநீர் இணைப்பு கொடுக்காமல் இருக்க, இப்போதிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, மாநகராட்சி எடுக்க வேண்டும்.
தவிர, இதேபோல, புழுதிவாக்கம், உள்ளகரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -